ஐடி ரெய்டில் சிக்கியது உண்மையான ஆவணங்கள்தான்.. டாக்டர் பாலாஜி பேட்டியால் குட்டு உடைந்தது
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உண்மையானவை என்பதை அரசு டாக்டர் பாலாஜியின் பேட்டி உறுதிப்படுத்திவிட்டது. இதனால் இனிமேலும் ஆவணங்கள் பொய்யானவை என கூறி அவர் தரப்பு தப்பிக்க முடியாது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். இந்த சோதனையின்போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உதவியாளர்களிடம் பணம் பறிிமுதல் செய்யப்பட்டது.
இதில் முக்கியமாக, ஆர்.கே.நகர் தேர்தல் குறித்த ஆவணமும் அம்பலமானது. ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், எந்தெந்த அமைச்சர்கள் எத்தனை பேருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது அதில் எழுதப்பட்டிருந்தது.
ரூ.89 கோடி சப்ளை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. அமைச்சர்கள் பெயர்களுக்கு பின்னால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகை, கொடுக்க வேண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மொத்தம் ரூ.89 கோடி சப்ளை செய்ய திட்டமிட்டது அம்பலமானது.
தேர்தல் ரத்து
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு முக்கிய காரணமே, விஜய பாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்தான். தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இதனால் மீண்டும் தமிழகம் தலைகுனிந்தபடி மற்றொரு தேர்தல் ரத்து சம்பவத்தை வேடிக்கை பார்க்க வேண்டியதாயிற்று.
போலி என பேட்டி
இந்த நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மீடியாக்களில் லீக் ஆகின. இதை கண்டித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆவணங்களை முதலில் வெளியிட்ட இரு டிவி சேனல்கள் மீது வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்தார். அவை போலியானவை என்று தினகரன், விஜயபாஸ்கர் போன்றோர் கூறிவருகின்றனர். ஆனால் அந்த ஆவணங்கள் உண்மையானவை என்பது அம்பலமாகியுள்ளது.
டாக்டர் ஒப்புதல்
ஐடி ரெய்டு நடந்தபோது கைப்பற்றப்பட்ட ஆவணம் ஒன்றில் அரசு டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இன்று அளித்த பேட்டியொன்றில், விஜயபாஸ்கரிடம் பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார் டாக்டர் பாலாஜி.
குட்டு உடைந்தது
ஐடி ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பொய் என கூறிவந்தார் விஜயபாஸ்கர். ஆனால் அவரிடம் பணம் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார் பாலாஜி. ஜெயலலிதா சுய நினைவோடு, அதிமுக வேட்பாளர்களின் ஃபாரம்-Bயில் கைநாட்டுவைத்தார் என அத்தாட்சி அளித்தவர்தான் இந்த பாலாஜி. இவர் பொய் சாட்சி கூறியதற்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியான நிலையில், அதை மறுத்து பாலாஜி பேட்டியளித்தார். லண்டன் டாக்டர் பீலேவின் தங்கும் செலவுக்காக அந்த பணம் தன்னிடம் தரப்பட்டதாக பாலாஜி கூறினார். எது எப்படியோ எதையோ கூற வந்து, கடைசியில் ஐடி ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணம் உண்மைதான் என்பதை பாலாஜி போட்டு உடைத்துவிட்டார். இதனால் விஜயபாஸ்கருக்கும், ஜெயலலிதா மரணத்தின்போது மர்மங்களை தூவியவர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தபடி உள்ளது.