பீப் பாடல்.. சிம்புவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
கடந்த மாதம் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பீப் பாடல் வழக்கில் சிம்பு, அனிருத் இருவருக்கும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பினர்.
முதல் முறை அனுப்பிய சம்மனுக்கு இருவரும் நேரில் ஆஜராகததால் 2 வது முறையாக சம்மன் அனுப்பினர். இந்த விவகாரத்தில் நடிகர் சிம்பு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 21ம் தேதி நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 4ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நடிகர் சிம்புவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதாடினார்.
ஆனால் நீதிபதி ராஜேந்திரன் சிம்பு மீது பதிவு செய்திருக்கும் வழக்குகள் ஜாமீனில் வரக்கூடிய பிரிவுகள் தான் என்று கூறி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார்.
இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட கிழமை நீதிமன்றங்களை அணுகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் நடிகர் சிம்பு மீதான 3 வழக்குகள் இதுவரை வாபஸ் பெறப்பட்டு இருக்கின்றன.மேலும் இந்த வழக்கில் இசையமைப்பாளர் அனிருத் நேரில் ஆஜராக மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications