திருவண்ணாமலையில் பரணிதீபம் ஏற்றப்பட்டது, மாலையில் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவமண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் கடந்த 13ம் தேதி வெள்ளித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் அதாவது கடந்த 14ம் தேதி மகாதேரோட்டம் நடைபெற்றது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று காலை சாமி சன்னதியில் இருக்கும் அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம், தீபாராதனை செய்யப்படும். மேலும் மாலை 5.30 மணிக்கு மேல் விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒவ்வொருவராக பலிபீடம் அருகே எழுந்தருள உள்ளனர்.
இதையடுத்து அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வருவார். அவர் காட்சி அளித்த பிறகு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே சமயத்தில் ராட்சத கொப்பரையில் மகாதீபமும் ஏற்றப்படும்.












Click it and Unblock the Notifications