தமிழர்களின் கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த பிள்ளைகளாகி விட்டோமா?
சென்னை: தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை.
கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது.
குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கலாச்சார சமிக்ஞை என்று கூறலாம்.

ஐவகை நிலம் கொண்ட தமிழ்நாடு
இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும், தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டுவந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை கொண்டது தமிழ்நாடு.

தேன், மீன், நண்டு
உதாரணத்திற்கு, மலையும், மலையை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பரப்பில், தேன் அதிகமாக கிடைக்கும். அதுவும் மலைத்தேன். எனவேதான் அப்பகுதி மக்கள் தேனையும், தினைமாவையும் அதிகம் விரும்பி சாப்பிட்டனர். குற்றால குறவஞ்சி இதை எடுத்து இயம்புகிறது. கடல் சார்ந்த நெய்தல் நில மக்கள் மீன், கருவாடு, நண்டு போன்றவற்றை சாப்பிட்டனர். ஏனெனில் அவர்களுக்கு அது பிரெஷ்ஷாக கிடைத்தது.

ஏழுவகை சாப்பாடு நம்முடையது
அக்கால தமிழ் மக்கள் உணவு முறையை ஏழு பிரிவாக பகுத்துவிடலாம். காய்கறி உணவு, கனி உணவு, மாமிச உணவு, அரிசி உணவு, பிற உணவு, பருகுநீர், மது ஆகியவை அந்த ஏழு உணவுகள். தமிழகத்தில் கிடைக்காத காய்கறிகளே இல்லை எனலாம். பீர்க்கங்காய், மாங்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் என காய்கறி உணவுக்கு பஞ்சமில்லை. அதுபோலத்தான் கனிகளும், முக்கனியான மா, வாழை, பலா தமிழர்கள் விரும்பி உண்ட உணவாகும். இம்மூன்று மரங்களுமே வீட்டின் கொல்லைப்புறத்தில் பெரும்பாலான இல்லங்களில் இருந்தன. கம்பு, கேழ்வரகு, அரிசி, உணவில் முக்கிய இடம் பிடித்தவை.

மான், முயல் கறி
தமிழக காடுகளில் திரியும் விலங்குகளை வேட்டையாடி மாமிச உணவு தேவையை தமிழன் பூர்த்தி செய்து கொண்டான். மான் (தற்போது சட்ட விரோதம்), முயல், பறவையினங்கள் அவனின் விருப்ப உணவாக இருந்துள்ளன. பருகுநீர் எனப்படும் பால், தயிர், வெண்ணை போன்றவை வயல் சார்ந்த மருத நில மக்களுக்கு இயல்பானவை. முழங்கையில் நெய் வழிந்தோட சாப்பிட்டு, பசுமாடுகள் சூழ வாழ்வதே செல்வத்தின் அடையாளம் என்று, சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. திருப்பாவையும் இதை பறை சாற்றுகிறது.

கள் குடித்து குதுகலித்தான்
உடல் ஊக்கத்திற்காக தமிழர்களால் மது குடிக்கப்பட்டது. மது என்பது பட்டைச் சாராயம் கிடையாது. அதுவும் இயற்கையோடு இயைந்ததுதான். பனை, தென்னை போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் கள் உடலுக்கு ஊக்கம் அளிக்க கூடியது. அதுவே மது என்று கூறப்பட்டு வந்தது. எப்படி பதநீர், இளநீர் சாப்பிடுகிறோமோ அதைப்போலத்தான் கள்ளும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் அதையும் அளவோடுதான் வைத்திருந்தான் தமிழன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பவனாயிற்றே.

பிரியாணி, பரோட்டா
இவைதான் தமிழர்கள் கலாச்சார உணவாக காலம் காலமாக இருந்து வந்தது. ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தில் கடந்த பல தலைமுறைகளாக அதீத மாற்றம் காணப்படுகிறது. கள்ளுக்கு பதிலாக கோக்கும், பெப்சியும், சாப்பாட்டில் பிரியாணியும், பரோட்டாவும் முக்கிய இடம் பிடித்துவிட்டன. இந்த தலைமுறை ஐரோப்பாவின் குடிமகன்கள் என்று நினைத்து சான்ட்விட்ஜ், பர்கர், பீட்சா என சாப்பிடுகின்றன. மண்ணின் மணத்தோடு சாப்பாட்டு மணமும் பறிபோய்விட்டது.

திருமண வீட்டிலும் பிரியாணி..
முகலாயர்கள் காலத்தில்தான் பிரியாணி இந்தியாவிற்குள் அறிமுகமானது. ஆனால் இன்று பிரியாணி என்பது ஏதோ தமிழரின் பாரம்பரிய உணவு போல மாற்றப்பட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டமா, பிரியாணி பொட்டலம் இருந்தால்தான் கூட்டம் சேருகிறது. காது குத்துக்கு கூட பிரியாணி கேட்கிறார்கள். பிரியாணி, அதுவும் மட்டன் பிரியாணி போடும் திருமணங்களே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.

பிரியாணியேதான் வேணுமா?
சாம்பார் சோறும், அதில் நெய்யும் ஊற்றினால் கஞ்சப்பயல் கல்யாணம் நடத்துகிறான் பார்... என்று எள்ளி நகையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். சாம்பார் கூட வேண்டாம், கறிக்குழம்பும், சோறும் போட்டாலும் கூட அந்த திருமணத்தை நடத்துபவர் ஜென்ம பகையாளி போல பார்க்கப்படுகிறார். இந்த கறிக்குழம்புக்கு, சிக்கன் பிரியாணியாவது போட்டிருக்கலாம் என்று உச்சு கொட்டுகிறார்கள். ஹோட்டலில் சென்று பிரியாணி சாப்பிடுவது கலாசாரத்தை சீரழித்துவிடாது. ஆனால் கலாசார திருவிழாவான கல்யாண வீடுகளில் பிரியாணியை போடுவது என்பது அடுத்த தலைமுறைக்கு நமது உணவு பழக்கம் குறித்த சரியான புரிதலை அளிக்க தவறிவருகிறோம் என்பதன் அடையாளமே.

ஆம்பூர் பிரியாணியாம்..
பிரியாணியை கண்டுபிடித்ததே நாம்தான் என்பதைப்போல எத்தனை ஆர்ப்பாட்ட விளம்பரங்கள். ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என ஆங்காங்கு இருக்கும் ஹோட்டல்களை பார்த்துவிட்டு பக்கத்து மாநிலத்துகாரர்கள் எல்லாம், பிரியாணியின் தாயகம் தமிழ்நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம்தான் பிரியாணியை கண்டுபிடித்தோம், பரோட்டாவை கண்டுபிடித்தோம் என்றால், கிடா வெட்டும் கோயில்களில், கறியும் சோறும் போடுவதற்கு பதிலாக பிரியாணியைத்தானே போட்டிருப்பார்கள்.

சேட்டன் சேட்டன்தான்..
கலாசாரத்தை காப்பதில் மலையாளிகளை அடித்துக்கொள்ள ஆளில்லை. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கொட்டை அரிசி சாதம் தவறாமல் இடம் பெறுகிறது. மலையாளி ஸ்டைல் ஹோட்டல்களில் கூட கொட்டை அரிசி சாப்பாடுக்குதான் ஏக கிராக்கி. ஒரு பண்டிகை என்றால் வேட்டி அவர்களை அலங்கரிக்கிறது. நமது பாரம்பரியம் இதுதான் என்று அடுத்த தலைமுறைக்கும் அவர்கள் உரக்க சொல்கிறார்கள். புட்டும், ஆப்பமும், கொண்டை கடலையும் அவர்கள் கனவிலும் மறக்காதவை. கன்னடர்கள் திருமண விழாக்களில் கோசம்பரி, ஒப்பட்டு போன்றவை தவறாமல் இடம் பெறுகிறதே.

தாழ்வு மனப்பான்மை தமிழன்
ஒரு இனத்தை அழிக்க அதன் கலாச்சாரத்தை மறக்கடித்தால் போதும். தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டவர்கள் என்று சமீபத்திய வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக் காண்பிக்கின்றனர். மலையாளிகளை போல தங்களை தாங்கள் உயர்வாக நினைக்க தெரியாதவர்கள் தமிழர்கள். எனவேதான் பிரிட்டிஷ் உள்ளிட்ட பிற நாட்டு கலாசாரத்தை எப்போதும் உயர்வாக நினைத்து அதை தாங்களும் பின்பற்றுகிறாரர்கள். இது தங்களது தாழ்வு மனப்பான்மையை மறைக்கும் வெளிவேஷமே. நமது கலாசாரம் வெள்ளைக்காரரை விடவும் மூத்தது, நமது அறிவியல், வின்வெளி விஞ்ஞானம், வீரம் யாருக்கும் சளைத்தது கிடையாது என்பதை வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

நெருப்புக்கு பிறந்தவர்கள்
வாழிடத்துக்கு தக்கபடி வாழ்க்கை முறையையும், சாப்பாட்டையும் அமைத்துக்கொள்வதுதான் ஆரோக்கியம், புத்திசாலித்தனம். தமிழர்கள், தமிழில் பேசுவதையும், தமிழ் பெயர் சூட்டிக்கொள்வதிலும், தமிழ் பண்பாட்டு, கலாசார உணவுகளை விழாக்களில் பரிமாறுவதிலும் பெருமிதம் அடைய வேண்டும். இப்படி செய்பவர்கள்தான் உண்மையான அறிவாளிகள் என்று பிறரும் பாராட்ட வேண்டும் . அப்போதுதான் தாழ்வு மனப்பான்மை நீங்கி நாம் செம்மறியாடுகள் அல்ல, எதையும் சாதிக்கும் சிங்கங்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்ற தெளிவு தமிழருக்கு ஏற்படும்.












Click it and Unblock the Notifications