கோவை வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்றக் கோரி பாஜகவினர் உண்ணாவிரதம்!
கோயம்புத்தூர்: கோவை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி பல மாத இழுபறிக்குப் பின்னர் நேற்றுதான் இறுதி செய்யப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன.
பாஜக அறிவித்த பட்டியலில், கோயம்புத்தூரில் மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அத்தொகுதியில் வானதி சீனிவாசன், ஜி.கே. செல்வகுமார், எஸ்.ஆர். சேகர் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்துக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள், வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். அத்துடன் பாஜக அலுவலகலத்திலேயே உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக நிகழ்ச்சிகள் எதிலுமே கலந்து கொள்ளாத சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? அவரை மாற்றும்வரை உண்ணாவிரதம் தொடரும் என்று பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.