ஜனாதிபதி தேர்தல்.. அங்கிட்டு ஓ.பி.எஸ்.. இங்கிட்டு ஈபிஎஸ்.. 2 பெண்டாட்டிக்காரராக மாறும் பாஜக!
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க அதிமுகவின் இரு அணிகளும் தயாராக இருப்பது சமிக்ஞைகள் மூலம் பாஜகவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி பவனிச்சாமி அணி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் இதற்கான முஸ்திபுகளில் ஏற்கனவே இறங்கிவிட்டனர். யார் முந்திக்கொண்டு ஆதரவை வழங்குவது என்பதில் பெரும் போட்டியே நிலவுகிறது.
சில வாரங்கள் முன்பே பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் கணக்கில் பாஜகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்து சமிக்ஞையை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு டிவிட்டை டெலிட் செய்துவிட்டார்.
சிக்னல கொடுத்துட்டாங்கய்யா
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா, அவர்களுக்கு ஆதரவளிப்பதில் என்ன தப்பு என கேட்டு தங்கள் தரப்பு சிக்னலை வெளியிட்டுவிட்டார்.
ஆதாயங்கள்
இரு தரப்புமே பாஜகவை குளிர்விப்பதில் குறியாக உள்ளன. தினகரன் நெருக்கடியில் இருந்து தப்பிப்பது உள்ளிட்ட பல ஆதாயங்களை இவ்விரு அணியுமே பாஜகவிடமிருந்து எதிர்பார்ப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இரு அணிகளுமே பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில், இதுவே இவ்விரு அணிகளும் இணைய ஆரம்ப புள்ளியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமாளிக்கவும் வழி
பாஜக மதவாத கட்சி என்ற அடிப்படையில், தொண்டர்கள் மத்தியில் ஏதேனும் எதிர்ப்பு வந்தால்கூட, ஏற்கனவே முன்பு பாஜகவுக்கு ஜெயலலிதா ஆதரவு வழங்கியதை தெரிவித்து அவர்களின் எதிர்ப்பை சாந்தப்படுத்த தயாராகி வருகிறது அதிமுக கோஷ்டி தலைமை.
அதிமுக கதி
இரு தரப்பையும் எப்படி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற வித்தையை பாஜக கற்று வைத்துள்ளது. ஆனால் ஆதாயம் முடிந்த பிறகு அதிமுக கோஷ்டிகள் கதி என்ன என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அப்போதும், இதேபோல பிரிந்தே கிடந்தால், பாஜக வேறு முகத்தை காட்ட தயங்கப்போவதில்லை என எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.