படம் போட்டு பேஸ்புக்கில் லைக் வாங்குற மாதிரி ஆயிப் போச்சே கட்சிகளின் நிலை!!
சென்னை: தனது மனைவி ராதிகாவை எப்படியாவது திருநெல்வேலி தொகுதியில் நிறுத்தி விட வேண்டும் என்று தீவிரமாக இருந்து வந்தார் சரத்குமார். இதற்காகத்தான் நெல்லையில் மாநாட்டையும் நடத்தினார். அங்கு வைத்து ராதிகாவை மகளிர் அணித் தலைவியாகவும் அறிவித்தார். ஆனால் ஜெயலலிதா தனது கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்காமல் விட்டு விட்டதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி சரத்குமாரை பாஜக கூட்டணிக்கு இழுக்க அக்கட்சி முயல்வதாக செய்தி கிளப்பி விட்டு வருகிறார்கள். ராதிகா மூலமாக இந்த முயற்சிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதைப் பார்க்கும்போது பேஸ்புக்கில் ஏதாவது படத்தைப் போட்டு லைக் வாங்கி, நாங்களும் நிறைய லைக் வாங்குறோம்ல என்று கணக்குக் காட்டுவது போலத்தான் தெரிகிறது.
ஏற்கனவே வாய்க்கால் தகராறு
ஏற்கனவே பாஜகவில் ஏகப்பட்ட தகராறு. பாமக, தேமுதிக, மதிமுக ஆகியவை தங்களுக்குக் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு கொடி பிடித்து நிற்கின்றன.
யாரையும் தப்ப விடாதே...
ஆனால் தமிழகத்தில் முதல் முறயைாக தனது தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கத் துடித்து வரும் பாஜகவோ, யாரையும் விட்டு விட மனமில்லாமல் எல்லோருனும் இறங்கிப் போய் பேசிப் பேசி வருகிறது.
சரத்குமாருமா.. வரலாமே
இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியில் ஒரு சீட் கூட கொடுக்காமல் விடப்பட்டுள்ள சரத்குமார் அதிருப்தியாக இருப்பதாக வந்த செய்தியை வைத்து அவரையும் வளைக்க முடியுமா என்று ஆசைப்படுகிறதாம் பாஜக.
ராதிகா மூலமாக
இதற்காக சரத்குமாரின் மனைவியும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான ராதிகா மூலமாக காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள்.
நெல்லையைப் பிடிக்க நினைத்த சரத்
உண்மையில் சரத்குமாருமே கூட, ராதிகாவுக்கு எப்படியும் ஜெயலலிதா சீட் தருவார் என்று பெரும் நம்பிக்கையில் இருந்தார். ராதிகாவை நெல்லையில் நிற்க வைத்து எம்.பியாக்குவது என்றும் தீவிரமாக இருந்தார். இதனால்தான் அவரை மகளிர் அணித் தலைவியாக்கியும் அழகு பார்த்தார்.
கிடைத்தது அல்வாதான்
நெல்லைக்காக காத்திருந்த சரத்குமாருக்கு ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்தது அல்வா மட்டுமே. தனது கட்சியே 40 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவித்து விட்டு பிரசாரத்திற்கும் போயே போய் விட்டார்.
ஆனானப்பட்ட...
ஆனானனப்பட்ட இடதுசாரிகளையே ஜெயலலிதா மதிக்கவில்லை. இந்த நிலையில் சீட் கிடைக்காததற்காக சரத்குமார் வருத்தமே படத் தேவையில்லை என்று அரசியல் வட்டாரத்தில் ஆறுதலாக பேசுகிறார்கள். அதேசமயம், பாஜக கூட்டணிக்கு நிச்சயம் சரத் போக மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.