வீட்டுமனை பட்டா வழங்க ரூ.1000 லஞ்சம் கேட்ட நெல்லை மாவட்ட தாசில்தாருக்கு 6 வருட சிறை
நெல்லை: இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் கேட்ட சேரன்மகாதேவி தாசில்தாருக்கு 6 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள தாலுகா ஆபீசில், ஆதி திராவிட நலத்துறை சிறப்பு தாசில்தாராக (வட்டாட்சியர்) பணியாற்றியவர் வைத்தியநாதன்.
இவரிடம் அரசின் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வந்த பயனாளி ஒருவரிடம் ரூ.1000 கொடுத்தால் கையெழுத்து போடுவேன், அல்லது போட முடியாது என கறாராக கூறி அனுப்பிவைத்துள்ளார்.
அந்த பயனாளி கொடுத்த புகாரின்பேரில் வைத்தியநாதன் மீது புகார் பதிவு செய்யப்பட்டு, நெல்லையிலுள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தாசில்தார் வைத்தியநாதன் குற்றவாளிதான் என தீர்ப்பளித்த கோர்ட், வைத்தியநாதனுக்கு, 6 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.