காவல் நிலையத்துக்குள் புகுந்து எஸ்ஐயை மிரட்டிய மினி பஸ் டிரைவர் கைது
சுரண்டை: சுரண்டை அருகே காவல் நிலையத்துக்குள்ளேயே புகுந்து எஸ்ஐயை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து விகேபுரத்திற்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் இட நெருக்கடியான பகுதியில் திரும்பி கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விகேபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் பஸ்சை தடுத்து நிறுத்தி நெருக்கடியான இடத்தில் இப்படி பஸ்சை திருப்ப கூடாது என கண்டித்தார்.
இதையடுத்து மினி பஸ்சில் இருந்த டிரைவர் வெங்கடேஷ்வரனுக்கும், சப் இன்ஸ்பெக்டருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த தகவலை கண்டக்டர் பாலசுப்பிரமணியன் செல்போன் முலம் பஸ் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். தகராறு ஏற்பட்டதால் அங்கு கூட்டம் கூடியது. இதனால் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் மினி பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறிவிட்டு சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக காவல் நிலையத்துக்கு விரைந்தார். இதை தொடர்ந்து வந்த மினி பஸ் உரிமையாளர் செல்வன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடுமையாக மிரட்டி விட்டு சென்றார்.
இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ முருகேசன் புகாரில் பேரில் டிரைவர் வெங்கடேஷ்வரன், கண்டக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மிரட்டி சென்ற உரிமையாளர் செல்வனை இன்ஸ்பெக்டர் மாடசாமி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.