செந்தூர்பாண்டியன் மறைவு.. கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணத்தை தொடர்ந்து கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், இடைத்தேர்தல்களுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வரோ, அமைச்சரோ சட்டமன்ற அல்லது சட்ட மேலவை உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக இவ்விரு பதவிகளில் ஏதாவது ஒன்றை அவர் அடைந்தாக வேண்டும்.
பிரதமராக இருந்தால் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக வேண்டியது அவசியம்.

ஆறு மாதங்களுக்குள்
எம்.எல்.ஏ ஒருவர் மறைந்துவிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ அத்தொகுதிக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அப்படிப்பார்த்தால், செந்தூர்பாண்டியன் மறைவையடுத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும்.

ஓராண்டுக்கு உள்ளே
ஆனால், எம்.எல்.ஏவின் பதவிக்காலம் 1 ஆண்டுக்கும் குறைவாக இருக்கும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது எளிதன்று. 2011 ஏப்ரல் மாதம், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்தான் செந்தூர்பாண்டியனும் வெற்றி பெற்றார்.

ரூல்ஸ் படி போனால்..
அந்த அடிப்படையில், இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே, அவரின் பதவிக்காலம் உள்ளது. அதேநேரம், பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ளது. ஆறுமாதங்களுக்கு மேல் ஒரு தொகுதியை காலியாக வைத்திருக்க கூடாது என்ற ரூல்ஸ் படி போனால் இடைத்தேர்தல் கட்டாயம்.

மத்திய அரசிடம் ஆலோசனை
ஆனால், ஓராண்டுக்கு குறைவான பதவிக்காலம் உள்ள சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் நடத்த வேண்டுமானால், மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஒரு விதிமுறை உள்ளது. அப்படி கலந்தாலோசிக்கும்போது மத்திய அரசு, மாநில அரசின் கருத்தை கேட்கும் வாய்ப்புள்ளது. மாநில அரசு, இந்த இடைத்தேர்தலை தவிர்க்கும் என்றே தெரிவதால், கடையநல்லூரில் இடைத் தேர்தல் நடத்த மத்திய அரசு விருப்பம் தெரிவிக்காது.

விரும்பாது மாநில அரசு
இடைத்தேர்தலுக்காக அமைச்சர்களை குவிப்பது, தேர்தல் நடத்த விதிமுறை அமல் போன்றவற்றால், நெல்லை மாவட்டத்தில், அரசால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த ரிஸ்க் வேண்டாம் என்றே மாநில அரசு கருதும் என்பதால் கடையநல்லூரில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications