லண்டன் டாக்டர் ரிச்சர்ட் என்ன அதிமுக உறுப்பினரா? கௌதமியை விளாசும் சி.ஆர். சரஸ்வதி
அதிமுகவைப் பற்றி வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளி கொண்டு வர வேண்டும் என்றும் கௌதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கௌதமிக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி பதலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது என அனைத்துமே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடர்பான உண்மைகளை பிரதமர் மோடி வெளி கொண்டு வர வேண்டும் என்று கௌதமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
கௌதமியின் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. இதுதொடர்பாக அவர் பேசியது:
அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும்
அம்மாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரதமர் அலுவலகம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டே இருந்தது. ஏனென்றால், பிரதமர் மோடியும், மறைந்த அம்மாவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பில் இருந்தவர்கள். எனவே, கௌதமி விமானத்தை எடுத்துக் கொண்டு டெல்லி போய் விசாரித்துக் கொள்ளட்டும்.
தேசிய தலைவர்கள் பொய் சொன்னார்களா?
மத்திய அமைச்சர்கள் பல முறை அப்போலோவிற்கு வந்தார்கள். மரியாதைக்குரிய ராகுல்காந்தி அவர்கள் வந்தார். மாண்புமிகு கவர்னர் வந்தார். இத்தனை பேரும் மருத்துவமனைக்கு வந்து அம்மாவைப் பற்றி டாக்டர் மற்றும் முக்கியமானவர்களிடம் விசாரித்துவிட்டு, கீழே சென்று எல்லா பத்திரிகைகளுக்கும் அம்மா நலமாக இருக்கிறார் என்றுதான் சொன்னார்கள்.
கௌதமிக்கு ஏன் சந்தேகம்?
இந்தச் செய்தியை அதிமுகவினர் மட்டும் சொல்லி இருந்தால் கௌதமிக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் வந்திருக்கலாம். ஊடகங்களுக்கு செய்தி சொன்னவர்கள் அனைவரும் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், அப்போலோ வந்துவிட்டு இந்தச் செய்தியைத்தான் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டு போனார்கள்.
டாக்டர் ரிச்சர்ட் என்ன அதிமுக உறுப்பினரா?
அம்மா உடல் நலம் தேறி வருகிறார். நன்றாக இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கௌதமி பார்க்க வில்லையா அல்லது படிக்க வில்லையா? எய்ம்ஸ் டாக்டர்ஸ் யாரு? அரசு மருத்துவர்கள் தானே? அவர்கள்தான் டெல்லியில் இருந்துவந்து சிகிச்சை கொடுத்தார்கள். ரிச்சர்ட் என்ன அதிமுகவைச் சேர்ந்த டாக்டரா? அவரும் தானே சிகிச்சை கொடுத்தார்.
அலங்காரத்தோடுதான் அம்மா
கௌதமி எதற்காக இப்படி கேட்கிறார்? ஐ.சி.யூவில் இருக்கும் போது நிச்சயம் யாராக இருந்தாலும் நோயாளியை பார்க்க முடியாது. வார்டுக்கு வந்த பின்னர் மற்றவர்கள் பார்த்திருக்கலாமே என்று கௌதமி கேட்கிறார். அவருக்காக இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எங்கள் அம்மாவிற்கு ஒரு குணம் உண்டு. வீட்டில் கூட யாராவது தன்னை பார்க்க வந்தால், முழு அலங்காரம் செய்து கொண்டுதான் வந்து வந்தோரை பார்ப்பார். கேஷ்வலாக, வீட்டில் தானே இருக்கிறோம் என்று ஏனோ தானோ என்று உடை உடுத்த மாட்டார். அவரது வழக்கம் அப்படி. எம்.ஜி.ஆர் எப்படி தொப்பியோடு இருப்பார் என்று அடையாளம் இருக்கிறதோ அதே போன்று அம்மாவும் அலங்காரத்தோடுதான் இருப்பார். ஆகவேதான் மருத்துவமனையில் இருந்த போது, தன்னை யாரும் அந்த உடையில் பார்க்க அம்மா விரும்பவில்லை.
எத்தனை முறை கார்டனுக்கு வந்திருக்கிறார் கௌதமி?
நான் 15 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். எத்தனை முறை கார்டனுக்கு கௌதமி வந்திருக்கிறார்கள். எத்தனை முறை அம்மாவை சந்தித்து பேசி இருக்கிறார்கள். கட்சியைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ தெரியாமல் கௌதமி இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். கௌதமி டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்தே அனைத்தையும் கேட்டுக் கொள்ளட்டும். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். வதந்திகளை செய்யாதீர்கள்.
வதந்தி கும்பலோடு சேர்ந்த கௌதமி
எனக்கு பிறகு இந்தக் கட்சியை தொண்டர்கள் வழி நடத்துவார்கள் என்று எங்கள் அம்மா தெளிவாக சட்டமன்றத்தில் சொன்னார்கள். இந்த கட்சி இன்னும் பல 100 ஆண்டுகள் இருக்கும். அதுபோன்ற தொண்டர்களை கொண்ட கட்சி இது. நிச்சயமாக வெற்றி நடை போடும். வீர நடை போடும். அம்மா விட்டுச் சென்ற பணிகளை கழகம் தொடர்ந்து செய்யும். தேவை இல்லாமல் எல்லோரும் சேர்ந்து ஒரு வதந்தியை பரப்புவதில் கௌதமியும் சேர்ந்துவிட்டது நினைத்து வருத்தமாக உள்ளது.
அடுத்து என்ன?
இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இன்னும் செயற்குழு பொதுக்குழு கூட உள்ளது. இனி என்ன நடக்க உள்ளது என்பதை கழகம் அறிவிக்கும். கழகத்தை கட்டிக் காக்கும் வகையில் தான் தொண்டர்கள் இருக்கிறோம். யார் என்ன வதந்தியை கிளப்பினாலும் சரி இந்த கழகம் வீறுநடை போட்டு நடக்கும். அம்மாவின் பாதையில் இந்தக் கட்சி செல்லும் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.