இனி, கண் தானத்திற்கும் 108 ஆம்புலன்சை அழைக்கலாம்...!
சென்னை: கண் தானம் செய்வதற்கும் அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் தானம் தொடர்பான இருவார விழிப்புணர்வு விழா அக்டோபர் 25 முதல் செட்பம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரச கண் மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது அம்மருத்துவமனை இயக்குநர் நமீதா புவனேஷ்வரி கூறியதாவது :-
வாக்கத்தான்...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை வாக்கத்தான் நடத்தப்பட உள்ளது.
சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...
செப்டம்பர் 8ஆம் தேதி கண்தானம் செய்வோர், கண்தானம் பெற்றவர் குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் தானத்திற்கு 108 சேவை மையத்தை அழைக்க அரசு வழிவகை செய்துள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2 மணி நேரத்திற்குள்...
இது தொடர்பாக அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை மைய நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், ‘இறந்த இரண்டு மணி நேரத்தில் கண் தானம் செய்ய வேண்டும். கண் தானம் செய்ய 108 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அரசு அதற்கான வழிவகைகளை செய்துள்ளது.
குறித்த நேரத்தில்....
சேவை மையம் தமிழகத்தில் 69 அரச மற்றும் தனியார் கண் வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் கண் வங்கிகள் வந்து தானம் பெற்றுக்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.