குடி போதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து – அரசு உத்தரவு
நெல்லை: போதையில் வாகனம் ஓட்டி விபத்து நடந்தால் உடனடியாக அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என போக்குவரத்து அலுவலகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான விபத்துகளில் டிரைவர்கள் போதையில் இருப்பதும், செல்போனில் பேசியபடி செல்வதும் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2013ம் ஆண்டில் 2301 விபத்துகளில் 577 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நடந்துள்ள விபத்துகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, டிரைவர்களின் அஜாக்கிரதை போன்றவையே காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துகுள்ளாகும் டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் கங்கொண்டானில் நடந்த விபத்திற்காக வாகனம் ஓட்டிய டிரைவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோரின் லைசென்சை 6 மாத காலம் அல்லது ஓராண்டு காலம் சஸ்பெண்டு செய்ய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், கடந்தாண்டு இது சம்பந்தமாக 32 பேரின் லைசென்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 25 பேரின் லைசென்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.