தமிழ்நாடு காங்.கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - எம்எல்ஏ விஜயதாரணி மீது வழக்குப் பதிவு !
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக மகளிர் காங்கிரஸ் அணியின் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏவை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் மகளிர் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவி சாந்தாஸ்ரீ புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திரவியம், பொன் பாண்டியன், பிராங்கிளின் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபால் சாதி பெயரை கூறி தன்னை திட்டியதாக காங்கிரஸ் துணை தலைவி மனோகரி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸில் மட்டும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
ஏற்கனவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியிடம் புகார் அளித்தனர். இப்போது மகளிரணித்தலைவியும் இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.