கிரிமினல் கேஸ், சொத்துக் குவிப்பு வழக்கு.. ஜெயலலிதாவின் பரபரப்பான டைரிக் குறிப்பு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா எல்லாவற்றிலும் எப்போதுமே நம்பர் ஒன்தான். தமிழகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் என்ற பெருமையுடன் வலம் வரும் ஜெயலலிதா, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெயரையும் கூடவே வைத்துள்ளார்.
தமிழகத்தில் எந்த ஒரு முதல்வர் மீதும் இத்தனை ஊழல் வழக்குகள் பாய்ந்ததில்லை என்று கூறும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன.
மேலும் வரலாறு காணாத வகையில் ஜெயலலிதாவின் வழக்குகளை விசாரிப்பதற்காக 3 தனியான சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன.
13 வழக்குகள்
ஜெயலலிதா மீது மட்டும் 13 வழக்குகள் திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது.
கூட்டாளிகள் மீது 33 வழக்குகள்
சசிகலா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது 33 வழக்குகள் பாய்ந்தன.
கலர் டிவி வழக்கு
கடந்த 1995ம் ஆண்டு கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 45,302 கலர் டிவி பெட்டிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி ஜெயலலிதா மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கிலிருந்து 2000மாவது ஆண்டு ஜெயலலிதா, சசிகலா நடராஜன், சசிகலாவின் உறவினர் எஸ்.ஆர். பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
7 பேருக்குத் தண்டனை
அதேசமயம் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 7 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைக்குள்ளான மற்ற 6 பேர் - முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி, செல்வகணபதியின் பிஏ ஜனார்த்தனம், டிவி ஏஜென்டுகள் துரைசாமி, முத்துக்குமாரசாமி ஆகியோர்.
டான்சி நில ஊழல்
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை 1992ம் ஆண்டு, தான் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷனுக்காக ஜெயலலிதா வாங்கினார் என்பது ஒரு வழக்கு. இந்த வழக்கிலிருந்து 2000மாவது ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் இந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டார்.
கிப்ட் வழக்கு
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. 1992-93ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை ஜெயலலிதா பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்தப் பணம் வெளிநாட்டிலிருந்து ஜெயலலிதாவுக்கு வந்ததாகும். இதை அரசின் கணக்கில் சேர்க்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டதாகவும், இதனது தனது வருமான வரிக் கணக்கில் அவர் காட்டியுள்ளதால் இது குற்றமாகும் என்றும் சிபிஐ வாதாடியது.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு
ஜெயலலிதாவும், அவரது முன்னாள் அமைச்சர்கள் சிலரும், கொடைக்கானலில் விதிமுறைகளுக்குப் புறம்பாக 7 மாடிகளைக் கொண்ட பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்குான அனுமதியைக் கொடுத்ததாக ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ஜெயலலிதாவும், அவரது முன்னாள் அமைச்சர்கள் நால்வர் குற்றவாளிகள் என்று தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கும் மற்றவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் அதண்டனை வழங்கப்பட்டது.
தர்மபுரியில் பஸ் எரிப்பு - 3 மாணவிகள் உயிருடன் எரிப்பு
இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர். தர்மபுரி அருகே வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை அதிமுகவினர் தீவைத்துக் கொளுத்தியதில் 3 மாணவிகள் உயிருடன் எரிந்து மாண்டனர்.
நிலக்கரி இறக்குமதி ஊழல்
1993ம் ஆண்டு தமிழக மின்வாரியத்திற்காக 20 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மின்வாரியத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியை வாங்க ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் ஈடுபட்டதால் அரசுக்கு ரூ. 6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர, முன்னாஐள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டிவி. வெங்கட்ராமன், மின்வாரிய முன்னாள் தலைவர் ஹரிபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் நாராயணன், ராமச்சந்திரன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
திராட்சைத் தோட்ட வழக்கு
1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்,செகந்திராபாத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 30 ஏக்கர் திராட்சைத் தோட்டத்தில் விளைந்த திராட்சைப் பழங்களை விற்ற வகையில், அரசிடமிருந்து விவசாயி என்ற வகையில் ரூ. 60 லட்சம் வரிச் சலுகையை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஆனால் அப்படி ஒரு திராட்சனை விற்பனையே நடைபெறவில்லை, என்று வருமான வரித்துறை குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்தது. அதாவது விற்காத திராட்சைக்கு ஜெயலலிதா வரிச் சலுகை பெற்று அனுபவித்துள்ளார் என்பது குற்றச்சாட்டாகும்.
தெற்காசிய விளையாட்டு விளம்பர ஊழல் வழக்கு
கடந்த 1995ம் ஆண்டு சென்னையில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியின்போது மீனா அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்திற்கு ரூ. 2 கோடி அளவுக்கு கட்டணத் தள்ளுபடியை ஜெயலலிதா அறிவித்தார். இதுகுறித்தும் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு
1991 முதல் 96 வரையிலான தனது ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 66 கோடி அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா சொத்து சேர்த்தார் என்பது இந்த வழக்கு. இந்த வழக்குதான் இன்னும் இழுத்துக் கொண்டுள்ளது. இதில்தான் நாளை தீர்ப்பு வரப் போகிறது.
கிரானைட் குவாரி வழக்கு
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தனியாருக்கு கிரானைட் குவாரி உரிமம் வழங்கியதில் ரூ. 39 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியதாக தொடரப்பட்ட வழக்கு இது.
டிட்கோ பங்கு விற்பனை வழக்கு
இரண்டு தொழிலதிபர்களுக்கு டிட்கோவின் பங்குகளை விற்றதில் முதல்வர் என்ற வகையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த விற்பனையால், அரசுக்கு ரூ. 28 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு
1993-94 ஆண்டில் தனது வருமானம் ரூ. 1 கோடியை வருமான வரிக் கணக்கில் தாக்கல் செய்யாமல் மறைத்தது தொடர்பாக வருமான வரித்துறை ஒரு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றம் விசாரித்தது.
அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் டாலர் நன்கொடை
அமெரிக்காவில் உள்ள பேங்கர்ஸ் டிரஸ்ட் நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் டாலர் பணத்தை நன்கொடையாக பெற்றது தொடர்பாக ஒரு வழக்கும் ஜெயலலிதா மீது போடப்பட்டது.