மில்க்ஷேக் குடித்து குழந்தைகள் மயக்கம் அடையவில்லை... வதந்தி கிளப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
சென்னை: கெவின்ஸ் மில்க்ஷேக் குடித்து பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப் பட்டதாக வெளியான தகவல் வதந்தி என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நேற்று சென்னை தனியார் பள்ளி ஒன்றில் மில்க்ஷேக் குடித்த சுமார் ஐம்பதிற்கும் அதிகமான குழந்தைகள் மயக்கமடைந்ததாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், அது தவறான தகவல் என சென்னையை சேர்ந்த கெவின்ஸ் மில்க்ஷேக் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது :-
சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எங்கள் நிறுவனம் சார்பில் விநியோகிக்கப்பட்ட ‘மில்க்ஷேக்' குடித்து குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக நேற்று செய்தி வெளியானது.
இதுதொடர்பாக பள்ளி முதல்வருடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என்று தெரிவித்தார். இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றும் தெரிவித்தார்.
மேலும் கெவின்ஸ் நிறுவனம் தயாரிப்புகள் தரமானதாக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். அடிப்படை ஆதாரம் இல்லாமல் எங்களை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.