டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை... சக டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் 9 மணிநேரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!
சேலம்: தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து அவரது தோழியும் சக டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் விஷ்ணுபிரியா விசாரித்து வந்த தலித் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் மாளவியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அதேபோல் விஷ்ணுபிரியாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அர்ச்சகரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியும் அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்றும் இதனால் என் பதவிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று ஊடகங்களில் குமுறி கொட்டிய கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதை ஏற்று சேலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. மகேஸ்வரி ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி. நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் நடத்தினர்.












Click it and Unblock the Notifications