விஷ்ணுபிரியா தற்கொலை: கீழக்கரை டிஎஸ்பியைத் தொடர்ந்து அரவக்குறிச்சி டிஎஸ்பி-யிடம் விசாரணை
நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக, அரவக்குறிச்சி டிஎஸ்பி கீதாஞ்சலியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணி புரிந்து வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா, உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்னர் விஷ்ணுபிரியா யாருடன் செல்போனில் பேசினார் என்பது குறித்து அவரது செல்போன் எண்களை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, மதுரை வக்கீல் மாளவியா, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் குருக்கள் விஜயராகவன் ஆகியோர் விஷ்ணுபிரியாவிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதேபோல், என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் 3 போலீசாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
விஷ்ணுபிரியா தற்கொலை செய்த அன்று அவரது உடலை அறையில் இருந்து, இறக்கும் போது உடனிருந்த பெண் சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்திர கலா, நித்யா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி டிஎஸ்பி கீதாஞ்சலி என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விஷ்ணுபிரியாவின் கடைசிக் கடிதத்தில் கீதாஞ்சலிக்கு ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், கீதாஞ்சலியிடம் சிபிசிஐடி போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக கீதாஞ்சலி பதில் அளித்தார்.
விஷ்ணுபிரியாவிற்கும், எப்படி பழக்கம் ஏற்பட்டது? விஷ்ணுபிரியா மன உளச்சலில் இருந்தாரா? எதற்காக அவர் பணம் பெற்றார் போன்ற கேள்விகள் கீதாஞ்சலியிடம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.