டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு... உடனடியாக விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.
திருச்செங்கோடு : டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, அப்பிரிவு போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.