சட்டசபைக்குள் வெடித்தது கலவரம்.. போர்க்களமானது.. மைக்குகளை பிடுங்கி எறிந்து எம்.எல்.ஏக்கள் அமளி
தமிழக சட்டசபையில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. மைக்குகளைப் பிடுங்கி எறிந்தும், நாற்காலிகளைத் தூக்கி வீசியும் எம்.எல்.ஏக்கள் மோதிக் கொண்டனர்.
சென்னை: சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் சசி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் வெடித்தது.
சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களைத் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆனால் வாக்கெடுப்பு தொடர்பாக பெரும் அமளியும், கலவரமும் வெடித்தது. நாற்காலிகளை தூக்கி வீசியும், மைக்குகளைப் பிடுங்கி எறிந்தும் பெரும் கலவரத்தில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பிற்பகல் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்ட்டது.