மந்திர சொம்பு வாங்கலையா?: சதுரங்க வேட்டை பட ஸ்டைலில் மோசடி
தேனி: சதுரங்க வேட்டை பட பாணியில் தேனியில் மந்திர சொம்பு மோசடி நடந்துள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் நாகராஜ். அவர் தன்னிடம் ஒரு மந்திர சொம்பு இருப்பதாகவும். இடி விழுந்ததால் பித்தளை இரிடியமாக மாறியுள்ளது. அதை கேரளாவில் விற்றால் பல கோடி தேறும். வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் கொட்டும் என்று பலரிடம் தெரிவித்து வந்துள்ளார். மேலும் அதை ரூ. 5 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்து வந்துள்ளார்.
இது குறித்து நாகராஜின் நண்பர் சங்கரலிங்கம் தனக்கு பழக்கமான விருதுநகரைச் சேர்ந்த மாரியப்பனிடம் கூற அவரோ மந்திர சொம்பு பற்றி தனது நண்பர் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். நந்தகுமாரோ தன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் பெற்றுள்ளார். நந்தகுமார், மாரியப்பனை அழைத்துக் கொண்டு சங்கரலிங்கத்திடம் சென்றுள்ளார்.
அவர் அவர்களை நாகராஜிடம் அழைத்துச் சென்றுள்ளார். நாகராஜோ ரூ. 3 லட்சத்தை பெற்றுக் கொண்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்தை தனது நண்பர் கருமலை கணேசனிடம் அளித்துவிட்டு சொம்பை வாங்கிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து நந்தகுமாரும், மாரியப்பனும் ரூ.2 லட்சத்தை ஏற்பாடு செய்து ஒரு காரில் ஆயுதங்கள், அடியாட்களுடன் தேவாரம் வந்துள்ளனர்.
அவர்கள் அழைத்த இடத்திற்கு நாகராஜும், கணேசனும் வந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தை தேவாரம் காவல் நிலையம் அருகே நிறுத்திவிட்டு நந்தகுமாரின் காரில் ஏறினர். காருக்குள் அடியாட்களும், ஆயுதங்களும் இருப்பதை பார்த்த நாகராஜும், கணேசனும் சொம்பை எடுத்து வருவதாகக் கூறி சென்றுவிட்டனர். நெடுநேரமாகியும் அவர்கள் வராததால் நந்தகுமார் தேவாரம் பகுதியில் அவர்களை தேடும்போது போலீசாரிடம் சிக்கினார்.
காரில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமார், மாரியப்பன், பாண்டியன், ஸ்டாலின்ராஜ், ரவிச்சந்திரன், கணேஷ்குமார், தமிழரசன் ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது மந்திர சொம்பு விவகாரம் பற்றி தெரிய வந்தது. போலீசார் நாகராஜன் மற்றும் கணேசனை தேடி வருகிறார்கள்.
தேனியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 முறை மந்திர சொம்பை வைத்து மோசடி நடந்துள்ளது. சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோ மண்ணுளி பாம்பை காட்டி நடிகர் இளவரசுவிடம் பணம் பறித்தது போன்று சொம்பை வைத்து நாகராஜ் ஏமாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications