சென்னை: போதையில் போர்சே காரை ஓட்டிய மாணவரால் விபத்து.. ஒருவர் பலி, 11 பேர் காயம் #porsche
சென்னை: சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று அதிகாலை குடிபோதையில் தாறுமாறாக ஓடிய போர்சே சொகுசு கார், சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆட்டோக்களில் உறங்கிக் கொண்டிருந்த 11 டிரைவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விகாஷின் நண்பர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரர் என கூறப்படுகிறது. இருவரும் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் இறுதிப் போட்டியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
குடிபோதையில் போர்சே சொகுசு காரை ஓட்டிச் சென்று சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் அங்கு நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியதில் 12 ஆட்டோக்கள் அப்பளம் போல நொறுங்கியது. சொகுசுக்காரும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் மற்றும் வரதன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதனது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டிய விகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது நண்பரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து தொடர்பாக அடையார் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.