69வது சுதந்திர தின விழா- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு
சென்னை: இந்தியாவில் நாளை 69வது சுதந்திர தினத்தினை ஒட்டி சென்னையின் முக்கிய அடையாளங்களான சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் முக்கிய அங்கமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தீவிரம்:
சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் டி.எஸ்.பி. தில்லை நடராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோப்பநாய்கள் கொண்டு ரயில் நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதன்மை வாயில் மட்டுமே:
ரயில்வே நுழைவு வாயில்கள் போலீஸ் பாதுகாப்பினால் சூழப்பட்டுள்ளது. முதன்மை வாயில் வழியாக மட்டுமே பயணிகள் ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியும்.
மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை:
ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழையும் அனைத்து பயணிகளின் உடமைகளும், எச்.எச்.எம்.டி எனப்படும் ஹேண்ட் ஹெல்த் மெட்டல் டிடெக்டர் மற்றும் டி.எப்.எம்.டி எனப்படும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகள் கொண்டு கடும் சோதனை செய்தும், ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பைனாகுலர் கண்காணிப்பு:
ரயில் நிலைய வளாகம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் பைனாகுலர் கருவி மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் மறைமுகமான பகுதி ஒன்றில் கோபுரம் அமைத்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் நடவடிக்கைகள் அனைத்தும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் போன்றும் சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்குலைக்க சதி:
இந்த பாதுகாப்பு பணி குறித்து சென்டிரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செஞ்சையா, "சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சில தீவிரவாத இயக்கங்கள் சதி செய்யக்கூடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவர் கூட விடாமல் அனைவரையும் பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் நுழைய விடுகிறோம்.
பார்சல் கொண்டு செல்லத் தடை:
சென்னை சென்ட்ரல் வழியாக டெல்லி செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் பார்சல் கொண்டு செல்வதற்கு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எனவே பொதுமக்களும் அவர்களுக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.