ஒருமழைக்கே நாறிப்போன சென்னை.. 2015 வெள்ளத்தை உருவாக்கிய அரசியல் வியாதிகள்
கடந்த முறை வெள்ளத்தில் மிதக்க விட்ட பிறகும்கூட நம்மைத்தானே ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தனர் இந்த மக்கள் என்ற அலட்சியமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
சென்னை: ஒருநாள் மழைக்கே சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ளது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாததால் 2015 வெள்ள காலத்தை நினைவூட்டிவிட்டனர் நமது சில அரசியல் வியாதிகள்.
2015ம் ஆண்டு ஏற்பட்ட கன மழை மற்றும் அதையொட்டிய வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சம்பவத்திற்கு பிறகாவது ஆளும் வர்க்கம் பாடம் கற்றிருக்க வேண்டும்.
இரண்டு வருடங்கள் கழித்த பிறகும், இன்னும் ஆட்சியாளர்களும், உள்ளூர் அரசியல் நிர்வாகிகளும் பாடம் கற்றதாக தெரியவில்லை.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சென்னையில் வட கிழக்கு பருவமழையையொட்டி நேற்று காலை முதல் இரவுவரை தொடர்ந்த மழையால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடி்கை எடுத்துவிட்டோம். வெள்ளம் வடிய தேவையான வாய்க்கால் வசதி செய்து கொடுத்துவிட்டோம் என்றெல்லாம், மழை பெரிதாக பெய்யாது என்ற தைரியத்தை புருடா விட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகள் முகத்தில் கரி.
சாதாரண மழைக்கே இந்த நிலை
ஒருநாள் மழை, அதிலும் சில பகுதிகளில் சாதாரணமான அளவில் மட்டுமே பெய்த மழை, அதற்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர் ஆட்சியாளர்கள். அண்ணாநகர், மயிலாப்பூர் பகுதிகளில் நேற்று மேக வெடிப்பு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 10 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் வழக்கமான அளவு மழைதான்.
2015 நினைவு உள்ளதா
2015ல் தாம்பரம் பகுதியில் ஒரு மணி நேரத்தில் சுமார் 50 செ.மீ மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தை 10 செ.மீ மழைக்கே பார்த்துவிட்டது சென்னை. இத்தனைக்கும், இத்தனை நாட்களாக வறண்டு கிடந்த பூமியிலேயே இவ்வளவு வெள்ளம் எனில், அடுத்தடுத்த நாட்களில் மழை தொடர்ந்தால் வெள்ளம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பல் இளிக்கும் பேச்சு
மீண்டும் ஒருமுறை அரசியல்வாதிகளின் இனிக்கும் பேச்சு பல் இளிக்கிறது. கடந்த முறை வெள்ளத்தில் மிதக்க விட்ட பிறகும்கூட நம்மைத்தானே ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தனர் இந்த மக்கள் என்ற அலட்சியமும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே மக்களே உங்களை நீங்களே காத்துக்கொள்ள 2015ல் கையில் எடுத்த அதே ஒற்றுமையெனும் ஆயுதத்தை ஏந்துங்கள். மீண்டும் இயற்கை பேரழிவில் இருந்து நம்மை தப்புவித்துக்கொள்வோம்.