ராம மோகன் ராவின் லேப்டாப்பில் இருந்தது என்ன?
ராம மோகன் ராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த லேப்டாப்பில் ஏராளமான ஆவணங்கள் உள்ளதாம். இதன்படி விசாரிக்க ஆரம்பித்தால் பல அமைச்சர்கள் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
சென்னை: வருமான வரித் துறை ரெய்டு நடவடிக்கையால் தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் ஒரு பக்கம் ஆடித்தான் போயிருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் ராம மோகன் ராவ் அறையில் சோதனை நடத்தி அங்கிருந்து அள்ளிச் சென்ற லேப்டாப், டைரி, பைல்கள் என எல்லாவற்றையும் தீவிரமாக படித்து வருகிறது வருமான வரித் துறை.
லேப்டாப்பை திறக்க முயன்ற போது முதலில் பாஸ்வேர்ட் கேட்டதாம். அதை கூற மறுத்து விட்டாராம் ராம மோகன் ராவ். அவர்கள் பாணியில் கேட்கவே, லலிதா என்று சொன்னாராம் ராம மோகன் ராவ். யார் இந்த லலிதா என்று விசாரித்தால், அது அவரது நெருங்கிய தோழி என்பது தெரியவந்தது.
தோழியைப் பற்றிய விபரம் தெரிந்து வீட்டில் பிரச்சினை வரவே, நெல்லூரில் செட்டில் செய்து விட்டாராம் ராம மோகன் ராவ்.
லேப் டாப்பில் ஆவணங்கள்
வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கிய ராம மோகன் ராவ் லேப்டாப்பில்தான் ஏராளமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக சொல்கிறார்கள். சேகர் ரெட்டிக்கும் ராம மோகன் ராவுக்கும் இருந்ததொடர்புகள், யாருக்கெல்லாம் பங்கு கொடுக்கப்பட்டது என்ற மொத்த தகவலும் அந்த லேப்டாப்பில் இருந்துள்ளது.
தமிழக அரசின் டெண்டர்கள் பலவற்றில் நடந்திருக்கும் முறைகேடுகள் சம்பந்தான டாகுமெண்டுகளும் அதில் சிக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
முட்டை டூ லேப் டாப் கொள்முதல் வரை
முட்டை கொள்முதல் டெண்டர், விலையில்லா மடிக்கணினி டெண்டர், அது போல கல்வித் துறை சம்பந்தப்பட்ட டெண்டர்களில் அதிக அளவுக்கு விளையாடி இருப்பதையும் அதில் கண்டுபிடித்துள்ளார்கள். இதில் சில அமைச்சர்கள் பெயரை நேரடியாகவே ராம மோகன் ராவ் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டு இருக்கிறாராம். விசாரணை விரியும் போது தற்போது பதவியில் இருக்கும் அந்த அமைச்சர்களுக்கும் சிக்கல் வரலாம்
மகனின் லேப்டாப்
திருவான்மியூரில் ராம மோகன் ராவ் மகன் விவேக் வீட்டில் நடத்திய சோதனையிலும் லேப்டாப், கம்யூட்டர் என அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அதிலும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கிறதாம்.
டைரியில் உள்ள பெயர்கள்
ராம மோகன ராவின் டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளின் நடமாட்டத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். முழு ஆதாரம் கிடைத்தவுடன் அடுத்தடுத்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் கலக்கம்
ராம் மோகன் ராவ் வீடு, அவரது அறையில் நடந்த சோதனையால் தலைமைச் செயலகத்தில் ராமமோகன் ராவுக்கு கீழே பணி புரியும் சில ஊழியர்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். ராம மோகனுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவரது பிஏக்களின் வீடுகளில் ரெய்டு வரலாம் என்பதால், தங்களிடம் உள்ள முக்கிய ஆவணங்களையும், பணத்தையும், நகைகளையும் பல்வேறு இடங்களில் மறைத்து வருகிறார்களாம்.
அமலாக்கத்துறை விசாரணை
கைப்பற்றப்பட்ட ராம மோகன ராவின் ரகசிய டைரி மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர். அந்த ஆவணங் களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், பணம் மோசடி, கூட்டு சதி, முறைகேடாக தங்கம் பதுக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக், விவேக்கின் நண்பர் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
விரைவில் கைது
ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் சிபிஐயின் நடவடிக்கையும் அவர்கள் மீது விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம மோகன ராவ் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்படலாம் என்றும் தலைமை செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.