சென்னையில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி பறிமுதல்.. 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது, மக்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில், போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினரா. இதையடுத்து அவர்களிடம் இருந்த மூட்டையை பரிசோதனை செய்தனர்.
அதில், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சுமார் ஒரு கோடி மதிப்புக்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.