சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளி சுதாகர் மரணமடையவில்லை.. டீன் மறுப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்ததாக வந்த தகவலை டீன் மறுத்துள்ளார்.
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி சுதாகர் என்பவர் உயிரிழந்ததாக வந்த தகவலை டீன் நாராயணசாமி மறுத்துள்ளார்.
காயமடைந்த மாணவர் விஜய்க்கு முறையாக சிகிச்சை தரவில்லை என கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மருத்துவர்களை தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து பயிற்சி மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்களை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
500 மருத்துவர்கள் சாலை மறியலி்ல் ஈடுபட்டுள்ளதால் பாரிமுனை -சென்ட்ரல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எக்மோர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும், மருத்துவமனைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சித்தூரைச் சேர்ந்த நோயாளி சுதாகர் என்பவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அவர் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ஆளின்றி இறந்ததாக கூறப்பட்டது.
ஆனால் நோயாளி சுதாகர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தலைவர் நாராயணசாமி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், பல மருத்துவர்கள் பணிக்கு திரும்பி வருவதாகவும் கூறியுள்ளார்.