10,000 கோடி திட்டம்.. 5 மாவட்ட விளைநிலங்களை அழித்து.. சென்னை -சேலம் 8 வழிச்சாலை!
சென்னை: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டமானது ரூ.10,000 கோடி மதிப்பிலானது ஆகும்.
சென்னையிலிருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் இந்த திட்டத்தால் தொழிற்சாலைகள் பெருகும் , வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆளும் கட்சி கூறி வந்தது. இதனிடையே விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதற்காக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல்லும் நடப்பட்டது. இந்த திட்டத்தை விவசாயிகள் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் , பவானி சுப்புராமன் அமர்வு விசாரித்தது.
அப்போது நிலம் எடுக்க தடை விதித்தது. இந்த திட்டம் சேலத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது உள்ள சாலையின் படி சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்ல 274.300 கி.மீ .தூரம் உள்ளது. ஆனால் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தால் 250.300 கி.மீ. தூரமே இருக்கும் என்று தமிழக அரசின் கருத்தாக இருந்தது. இதனால் பயண தூரம் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.