சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!
சென்னை: சென்னை சிறுசேரியில் டி.சி.எஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்.
சேலம் மாவட்டம் ஆத்துரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனின் மகள் உமா மகேஸ்வரி. இவர் சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேடவாக்கத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கி அவர் பணிக்குச் சென்று வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று இரவு பணி முடிந்து உமா மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கிட்டதட்ட 8 நாட்கள் கழித்து, உமா மகேஸ்வரியின் சடலம் பிப்ரவரி 22 ஆம் தேதியன்று அழுகிய நிலையில், சிறுசேரிக்கு அருகில் புதர் ஒன்றிலிருந்து உடல் மீட்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்த தீவிர விசாரணையில் அப்பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தினைச் சேர்ந்த ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இவர்கள்தான் உமா மகேஸ்வரியை இரவில் பணி முடிந்து திரும்பியபோது தடுத்து மடக்கி பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து உடலை புதரில் வீசிச் சென்றனர் என்று தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் இறுதியில், இன்று நீதிபதி ஆனந்தி தீர்ப்பளித்தார். அவர் மூன்று குற்றம் சாட்டப்பட்டோரும் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும்,தலா ரூ. 5000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications