புயல் கரையை கடந்தபோது சென்னையில் திடீர் மயான அமைதி ஏன்?
சென்னை: வர்தா புயலின் கண் கரையை கடந்தபோது வானம் தெளிவாகி, மழை குறைந்தது. ஆனால் அதன் பிறகு அதன் கரங்கள் கரையை கடந்தபோது சென்னை படாதபாடு பட்டுவிட்டது.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் பேய்க்காற்று வீசியது. பேய்க்காற்றால் சென்னையில் சுமார் 6 ஆயிரம் மரங்கள் விழுந்தன, 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.
நேற்று பிற்பகல் 3 மணி அளவில் புயலின் கண் பகுதி கரையை கடந்தது. அப்போது வானம் தெளிவாகி மழை குறைந்தது. இதனால் மக்கள் மழை படிப்படியாக நின்றுவிடும் புயல் கரையை கடந்துவிட்டது என்று நினைத்தனர்.
கண் பகுதி கரையை கடக்கும்போது வெற்றிடம் ஏற்படுவதால் மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்கும், மழையும் குறையும். இதை பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
வர்தாவின் கண் பகுதி கரையை கடந்த பிறகு அதன் கரங்கள் கரையை கடந்தன. கரங்கள் கரையை கடந்தபோது சென்னையை சூறையாடிவிட்டுச் சென்றது.