ரூ.2000 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்த நிதி நிறுவன அதிபர் மதுரை கோர்ட்டில் சரண்
தமிழகம் மற்றும் கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2000 கோடி மோசடி செய்த உரிமையாளர் நிர்மலன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Recommended Video
மதுரை: கன்னியாகுமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2000 கோடி மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த உரிமையாளர் நிர்மலன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை நவம்பர் 29-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு ஏராளமானோர் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தில் பலரும் சேர்ந்து ரூ.2000 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் தனது மகளின் திருமணத்துக்காக வேணுகோபால் என்பவர் ரூ.17 லட்சத்தை முதலீடு செய்திருந்தார்.
மோசடியால் இரு மாநில மக்கள் பாதிப்பு
பெரும்பாலானோர் கட்டிய பணத்தை கேட்டதால் ரூ.2000 கோடியையும் சுருட்டி எடுத்துக் கொண்டு அதன் உரிமையாளர் நிர்மலன் தலைமறைவாகிவிட்டார். இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5000 மேற்பட்ட புகார்கள்
நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார், இவர் மீது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு
இவரது பினாமிகள் என்று கருதப்படும் 5 பேரை ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிதி நிறுவன உரிமையாளர்
பல தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருப்பு பணத்தை பதுக்கி வைத்து விட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நிதிநிறுவன உரிமையாளர் நிர்மலனிடமிருந்து திரும்ப பெற்று கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
நிர்மலன் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியும், 7 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்களைக் கடந்த மாதம் பறிமுதல் செய்தனர்.
29-ஆம் தேதி வரை காவல்
இந்நிலையில் நிர்மலன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் உள்ள முதலீட்டாளர்கள் நலச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை நவம்பர் 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி மீராசுகந்தி உத்தரவிட்டார்.