500, 1000 நோட்டுக்கள் விவகாரத்தில் நாட்டின் குடிமகனாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்தது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் பதற்றத்தையும் தவிர்ப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 8-ஆம் தேதி நள்ளரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது முதல் மக்கள் பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.
மத்திய அரசு இந்த விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிக் கணக்கு வைக்காதவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல் போன்றவற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பொருளாதாரா குழப்பம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?
- பணம் மாற்றுவதற்கான வங்கிக் கிளைகள், அஞ்சல் அலுவலகங்கள் குறித்த விவரங்களை மக்களுக்கு விளக்கமாக தெரியப்படுத்துங்கள்.
- இந்தப் பிரச்னையில் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று எடுத்து சொல்லுங்கள்
- வங்கிக் கணக்கு இல்லையெனில் கவலை வேண்டாம்... புதிய வங்கி கணக்கு துவங்குவது எளிது என எடுத்துச் சொல்லலாம்
- செல்லாத பணத்தாள்களை மாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்களுக்குத் தேவையில்லை என விளக்குங்கள்.
- பணத்தாள்களை மாற்ற வருகிற டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை நினைவூட்டுங்கள்.
- அதேபோல் ரிசர்வ் வங்கிக் கிளைகளிலும் மார்ச் 31-ந் தேதி வரை செல்லாத பணத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டு சொல்லுங்கள்.
- வங்கிகளில் யாராவது அதற்கான விண்ணபங்களை நிரப்ப உதவி கோரினால் அதனை செய்து கொடுங்கள்.
- சமூக வலைதளங்களை உரிய முறையில் பயன்படுத்தி பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்