சேஷசமுத்திரம் மோதல்... காயமடைந்த அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி.. ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை : விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள்-கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது...
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, சிலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை தடுத்த காவல் துறையினர்-வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், சங்கராபுரம் உதவி ஆய்வாளர் குழந்தைவேலு, முதல்நிலைக் காவலர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, சரவணன், ஆயுதப் படை காவலர்கள் ரஞ்சித்குமார், பரவேஸ்வர பத்மநாபன், யுவராஜ், சரவணன், கிராம உதவியாளர்கள் செல்வம், பாலுசாமி, கணேசன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.