தமிழக சட்டம் ஒழுங்கு நிலை... டிஜிபியுடன் முதல்வர் அவசர ஆலோசனை!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரனுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிஜிபியிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
புதிய ஊதிய முறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே போன்று நீட் தேர்வை எதிர்த்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதே போன்று நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.