பொறியாளர் ராகவேந்திரன் கணேசன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: பொறியாளர் ராகவேந்திரன் கணேசன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொறியாளர் ராகவேந்திரன் கணேசன் பலியானதை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பிரஸ்ஸெல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது, இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார்.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ராகவேந்திரன் கணேசனும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பெல்ஜியம் அதிகாரிகளால் இன்று அடையாளம் காணப்பட்டது.
இன்போசிஸ் நிறுவனத்துக்காக ராகவேந்திரன் கணேசன் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரஸ்ஸெல்ஸில் பணியாற்றி வந்துள்ளார். கணேசனின் மனைவி சென்னையில் வசிக்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க கணேசன் கடந்த மாதம் சென்னை வந்து சென்றுள்ளார்.
ராகவேந்திரன் கணேசன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராகவேந்திரன் கணேசன் பலியானதை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். இது மிகவும் துயரமான சம்பவமாகும்.
ராகவேந்திரன் கணேசன் பிரஸ்ஸல் நகரின் பணிபுரிந்தார். அவர் இதயமில்லா தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி விட்டார். இது அவரது மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன்.