ஜெ. தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்... தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றபின் ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கடந்த மே மாதம், 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. முதல்வரோடு, புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். கவர்னர் ரோசய்யா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இந்த புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இன்னும் சில நாட்களில் சட்டசபைக் கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தில் அது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், அதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி போன்றவை குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிதித்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.