மீண்டும் விற்பனைக்கு வருகிறது... 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய ‘மகாராணி’ டிசைன் சேலைகள்!
சென்னை: 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகாராணிகள் அணிந்திருந்த சேலையில் இருந்த வடிவமைப்புகள் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன.
நவீன ஆடைகளின் வருகையால் மெல்ல அழிந்து வரும் தமிழரின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை மற்றும் தாவணி போன்றவற்றை மீண்டும் மக்கள் விரும்பச் செய்யும் வகையில் பல புதுமைகளை செய்து வருகிறது 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனம்.
அதன்படி, கடந்தாண்டு அனுசரிக்கப் பட்ட வேட்டி தினத்தின் மூலம் வேட்டி விற்பனை அதிகரித்தது. இதனால் கோ-ஆப்டெக்சில் வழக்கத்தை விட வேட்டி விற்பனை 3 மடங்கு அதிகமானது.
இந்நிலையில், தற்போது பெண்களை கவரும் வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த மகாராணிகள் கட்டியிருந்த சேலையில் இருந்த வடிவமைப்புகளில் புதிய சேலைகளை தயாரித்து வருகின்றனர்.
அதன்படி, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன், மைசூர் மகாராணி, சிவகங்கை மகாராணி, சேதுபதி மகாராணி மற்றும் சரபோது ராணிகள் அணிந்த சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் சேகரித்துள்ளது. அவற்றில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளை ஆராய்ந்து புதிய பாரம்பரிய புடைவைகளை உருவாக்கி வருகிறது கோ-ஆப்டெக்ஸ்.
இந்நிலையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி சென்னை கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா.
அப்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'எம்ராய்டரி' பார்டர் வேட்டிகள், ஜெய்ப்பூர் 'பெட்ஷீட்'கள், இலக்கிய காட்சிகளுடன் கூடிய படுக்கை விரிப்புகள், தேனிலவு படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ரகங்களை அவர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக வடிவமைக்கப்படும் மகாராணிகளின் சேலை வடிவமைப்புகளையும் பார்த்த கோகுல இந்திரா, பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வு கூட்டத்தில் கதர்துறை செயலாளர் கர்மந்தர்சிங், இயக்குனர் பிரகாஷ், மேலாண்மை இயக்குனர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், துணைத்தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications