கை நிறைய கஞ்சா.. சிக்கிய மாணவன்... கோவை கல்லூரியில் போலீஸ் அதிரடி!
கோவை: கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா நுகர்வு பழக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் போர்வையில் விற்பனைக்கு வருவதாகவும் போலீசார் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த மாணவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சாவை விற்பனை செய்த மாணவனின் பெயர் விஜய் என்பதாகும் வயது 20. இவர், கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவர் கோவை அருகே சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு சி.எம்.ஸ் கலை, அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். சரவணம்பட்டியில் உள்ள கீரணத்தம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வரும் இவர்தான் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனியார் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு பரவலாக இருப்பதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே திங்கள்கிழமையன்று காலையில் கல்லூரி வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பயன்படுத்தியதாக 9 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் தங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த விஜய் என்ற மாணவரை கை காட்டியுள்ளனர்.
இதனையடுத்தே போலீஸார், விஜயை கைது செய்து அவர் தங்கியிருந்த அறையில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர், கோவில்பாளையம், துடியலூர் பகுதிகளில் வியாபாரிகளிடம் கஞ்சா வாங்கி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா போதை பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.