சென்னை கண்காட்சியில் ரூ.38 கோடி வைர நகைகளை கொள்ளையடிக்க முயற்சி – கொலம்பியா நாட்டு நபர் கைது
சென்னை: நட்சத்திர ஹோட்டலில் நடந்த நகைக் கண்காட்சியில் வைர வியாபாரியிடம் இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்க முயன்ற கொலம்பியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 19ம் தேதி முதல் சர்வதேச நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டு வியாபாரிகள் கலந்துகொண்டு தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வைர வியாபாரி வினோத் என்பவரும் கண்காட்சியில் பங்கேற்றார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு கண்காட்சி முடிந்ததும் மீதமிருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள நகைகளை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு இரவு 10 மணியளவில் ஹோட்டலின் கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார் வினோத்.
அப்போது கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஜோஸ் ஓஸம்பெர்க் என்ற ஒசாரியோ (36), ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜிம்மி ஆகிய இருவரும் வினோத் இருந்த பகுதிக்கு வந்து பேச்சு கொடுத்தனர். நகைப் பெட்டியை வினோத் காரின் சீட்டில் வைத்ததும் அதை எடுத்துக்கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்தனர். அதிர்ச்சி அடைந்த வினோத்தும், அவரது கார் ஓட்டுநரும் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இதில் ஜோஸ் மட்டும் பிடிபட்டார். அவரிடம் இருந்த நகைப் பெட்டியும் மீட்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜிம்மி தப்பிச் சென்றுவிட்டார். பிடிபட்ட ஜோஸை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடரும் கொள்ளை சம்பவங்கள்
சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதுபோல நகை கண்காட்சி நடந்தபோது, பல கோடி மதிப்புள்ள நகைகளை கொரியா நாட்டு ஆசாமிகள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த வழக்கில் கொள்ளையர்கள் பிடிபடவில்லை. நகைகளும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தில் நகை கொள்ளை போகாமல் காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காவலில் எடுத்து விசாரணை
பிடிபட்ட ஜோஸிடம் பலமுறை விசாரணை நடத்தியும் அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க முடியவில்லை. அவர் பயிற்சி பெற்ற கொள்ளையர்போல இருக்கிறார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேவு பார்த்த கொள்ளையர்கள்
கைது செய்யப்பட்டுள்ள ஜோஸ், தப்பிச்சென்ற ஜிம்மி இருவரும் நகைக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே சென்னை வந்து தங்கியுள்ளனர். கண்காட்சி குறித்த அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இந்தக் கொள்ளை முயற்சியில் சர்வதேச கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளன.
சர்வதேச கொள்ளையர்கள்
கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஸ்டாலிலும் பல கோடி மதிப்புள்ள நகைகள் இருந்தன. இந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருப்பதால் இவர்கள் சர்வதேச கொள்ளையர்களாக இருக்க வாய்ப்புள்ளது. என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விமான நிலையத்தில்
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் முழுவதையும் ஆய்வு செய்து வரும் போலீசார், கொள்ளையன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து அங்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.