கடந்த முறை வென்ற ஐந்தையும் மீண்டும் பெற்ற காங்கிரஸ்!
சென்னை: அதிமுக போட்டியிடும் தொகுதிகளாகப் பார்த்து காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது என்ற புகைச்சல் கிளம்பியுள்ளது. ஆனால் அதிமுக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் (கூட்டணிக் கட்சிகளுக்கும் இரட்டை இலை என்பதால்) போட்டியிடுவதால் இப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கான 41 தொகுதிகளை நேற்று திமுக அறிவித்தது. இது இரு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமணி சென்னிமலை போன்ற தீவிர இளம் காங்கிரஸார் மத்தியில் விரும்பிய தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை என்ற வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
அதேசமயம், தாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக கொடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இனி அடுத்து வேட்பாளர் தேர்வு என்ற மிகப் பெரிய ஆசிட் டெஸ்ட்டை காங்கிரஸ் சந்திககவுள்ளது.
கேட்டது கிடைத்தது - இளங்கோவன்
தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இன்னும் 4, 5 நாட்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். நாங்கள் கேட்ட தொகுதியை தந்திருக்கிறார்கள். மிகவும் திருப்தியுடன் செல்கிறோம் என்றார்.
40ல் அதிமுகவுடன் போட்டி
காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடி மோதலில் ஈடுபடுகிறது. ஒரு தொகுதியில் மட்டும் நேரடி மோதல் இல்லை.
காங்கேயம்
காங்கேயம் தொகுதியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவுடன் காங்கிரஸ் மோதுகிறது.
கடந்த முறை வென்ற 5
கடந்த முறை ஓசூர், விளவங்கோடு, கிள்ளியூர், பட்டுக்கோட்டை, குளச்சல் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது அந்தத் தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் பெற்றுள்ளது.