வாசனைக் காட்டி வதைக்கிறதே திமுக.. டென்ஷனில் காங்கிரஸ்!
சென்னை: ஜி.கே.வாசன் வரப் போகிறார், தமாகா வரப் போகிறது என்று திமுக தரப்பிலிருந்து வெளியாகும் தகவல்கள், காங்கிரஸுக்கான தொகுதிகளைக் குறைக்க திமுக வகுக்கும் உத்தியே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருதுகிறாராம். இருப்பினும் இந்த மறைமுக மிரட்டலுக்கு அடி பணிந்து விடாமல் கவுரமான தொகுதிகளைப் பெறுவதில் அவர் உறுதியாக இருக்கிறாராம் அவர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் முதலில் சேர்ந்தது. அது சேர்ந்தது என்பதை விட திமுதான் வலியக்கப் போய் காங்கிரஸை உள்ளே இழுத்து வந்தது. ஆனால் இன்னும் காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடையாமல் இழுபறியாக உள்ளது.
திமுக தரும் இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு திருப்தி இல்லை. கூடுதலாக அது சீட் எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக தன் தரப்பில் பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில்தான் திடீரென "சீனில்" ஜி.கே.வாசனின் தமாகா நுழைந்தது.
50க்குக் குறையக் கூடாது
ஆரம்பத்தில் 63 சீட்களில் உறுதியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் திமுகவோ அதில் பாதி அளவே அதிகபட்சம் என்று கூறி விட்டதால் அதிர்ச்சியாகி விட்டது காங்கிரஸ். நாம் சீட்டைக் குறைத்தாலும் கூட 50 சீட்டுக்கு ஒரு சீட் கூட வாங்காமல் விடக் கூடாது என்று பல தமிழக தலைவர்கள் கட்சி மேலிடத்திடம் உறுதிபடக் கூறியுள்ளனராம்.
35ன்னா டீல்
திமுக தரப்பில் வெகுவாக ஏறி வந்து தற்போது இறுதியாக 35தான் இறுதி என்று கூறியுள்ளனராம். ஆனால் காங்கிரஸ் தரப்போ, தனது நிலையில் பிடிவாதமாக உள்ளதாம்.
கருணாநிதி தலையீடு
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, 40 சீட் வேண்டுமானால் தரலாம், பேசிப் பாருங்கள் என்று மு.க.ஸ்டாலின் குழுவிடம் கூறியுள்ளாராம். இதையடுத்து அவர்களும் காங்கிரஸ் தரப்புக்குத் தகவல் கொடுத்துள்ளனராம்.
தமாகாவைக் காட்டி
இந்த நிலையில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் திடீரென சீனில் வந்தது. வாசனும் கூட்டணிக்கு வரப் போகிறார், அவருக்கும், காங்கிரஸுக்கும் சம எண்ணிக்கையில் சீட் தர திமுக முடிவு செய்துள்ளதாக வந்த தகவல்கள் இளங்கோவனை டென்ஷனாக்கி விட்டதாம்.
திமுக உத்தி
அதேசமயம், வாசன் வரப் போகிறார், நீங்கள் இறங்கி வராவிட்டால் எங்களுக்கு இன்னொரு காங்கிரஸ் இருக்கிறது என்று மறைமுகமாக திமுக மிரட்டுவதாக இளங்கோவன் கருதுகிறாராம். இருப்பினும் இதை அவர் பொருட்படுத்தவில்லையாம். மாறாக, கவுரமான சீட்டை வாங்கி விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.
யார் வந்தால் நமக்கென்ன
மேலும் திமுக கூட்டணியில் வாசன் இடம் பெற்றாலும் கூட திருநாவுக்கரசர், இளங்கோவன் உள்ளிட்ட சில தலைவர்களுக்குப் பிரச்சினை இல்லையாம். அதேசமயம், ராகுல் அதை விரும்பவில்லையாம்.
இளங்கோவன் நிலைப்பாடு
ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன கருதுகிறார் என்றால், இந்த சட்டசபைத் தேர்தலோடு எல்லாம் முடிந்து விடப் போவதில்லை. லோக்சபா தேர்தல்தான் நமக்கு முக்கியம். அதுவரைக்கும் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டியது அவசியம். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ நிச்சயம் ராகுல் உணர வேண்டும் என்று அவர் கூறி வருகிறாராம்.