காங்கிரஸ் தலைமையில் தே.மு.தி.க. உடன் கூட்டணி: சுதர்சன நாச்சியப்பன்
கோவை: தே.மு.தி.க. போன்ற கட்சிகள் காங்கிரசுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகின்றன. விரைவில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
''காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய்படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விரும்பாதவர். மக்களுக்கான தலைவராக விளங்கிய அவரை வைத்து ஓட்டு வேட்டையாட பா.ஜ.க. போலித்தனம் செய்து வருகிறது.
மோடி பிரதமரா?
பிரதமர் பதவியை பிடிப்போம் என்பதில் மோடிக்கே நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருந்திருந்தால், இந்நேரம் குஜராத் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டு, தீவிரமாக பிரதமர் பதவிக்கு முயற்சித்திருப்பார். தற்போது, இவரை நம்பி வைகோ செல்கிறார். வைகோ, அனைத்து தேர்தலிலும் சேரக் கூடாத பக்கமே இருந்து வந்தவர். தற்போதும் அதனை நிரூபித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க. 100 இடங்களை கைப்பற்றுவதே அரிது.
காங்கிரஸ் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமற்றவை. இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகாதவை.
காங்கிரஸ் சாதனைகள்
கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகள், திட்டங்கள் மக்களிடம் சரியாக கொண்டு செல்லாததே தோல்விக்கு காரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகள் மக்களிடத்தில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து டெல்லியில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முடிவெடுக்க உள்ளோம். இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவராக இருந்து வரும் ராகுல்காந்தி, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பது எங்களது கருத்து. அவரே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நம்புகிறோம்.
தேமுதிக கூட்டணி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தே.மு.தி.க. போன்ற கட்சிகள் எங்களுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகின்றன. விரைவில் நல்ல கூட்டணி அமையும்'' என்றார்.