தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்
புதிய ரூ2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
திண்டுக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் கூட்டுறவு வங்கிச் சேவை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ந் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கொடுத்து டிசம்பர் 30ந் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களின் பழைய நோட்டுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு போதிய நிதி வழங்காததாலும், அடகு வைத்த நகைகளை மீட்க வருபவர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களின் செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத் தலைவர் முத்துபாண்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற நிறுத்தத்தில்
ஈடுபடபோவதாக தெரிவித்தார். வேலை நிறுத்தப் போராட்டத்தில் 3,50,000 ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.