ஹூசைனி வழக்கு: நடராஜன், இளவழகனுக்கு 4 நாள் போலீஸ் காவல்
சென்னை: சிற்ப கலைஞர் ஹுசேனிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முதல்வரின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனை, அவரது நண்பர் இளவழகன் ஆகியோரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிரபல கராத்தே வீரர் ஹூசைனி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் கடந்த வாரம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அறக்கட்டளை சார்பில் தமிழர் எழுச்சி சிலை அமைக்க எம்.நடராஜன், என்னிடம் ஒப்பந்தம் போட்டார்.

சிலை அமைக்க வாய்மொழியாக ரூ.2 கோடி தருவதாக கூறி, ஒப்பந்தத்தில் ரூ.98 லட்சம் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் கட்டமாக ரூ.25 லட்சம் மட்டும் கொடுத்தார். ஆனால், மீதமுள்ள பணத்தை தராததால் நான் சிலை செய்து கொடுக்கவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன், எம்.நடராஜன், பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டுக்கு என்னை அழைத்து, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவருடன் சேர்ந்து அவரது உதவியாளர் கார்த்திக், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அறக்கட்டளை நிர்வாகி இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோரும் மிரட்டினார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 7 ஆம் தேதி குற்றாலத்தில் நடராஜனையும், சென்னையில் இளவழகனையும் போலீசார் கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆவணங்கள் கைப்பற்ற வேண்டி உள்ளதால் நடராஜன், இளவழகன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மானுவேல் அரசு, சைதாப்பேட்டை பெருநகர 11வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நடராஜனிடம், "நீங்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு செல்கிறீர்களா?" என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர், "நான் போலீஸ் காவல் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாந்தி, எம்.நடராஜன், இளவழகன் ஆகியோரை வருகின்ற 14 ஆம் தேதி பகல் 2.30 மணி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications