ஆர்.கே.நகரில் சிபிஎம் வேட்பாளர் லோகநாதன் வேட்புமனு தாக்கல்... சீதாராம் யெச்சூரி விரைவில் பிரச்சாரம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 12ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
சிபிஎம் கட்சி வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி பிரவின் நாயரிடம் வேட்புமனுவை அவர் வழங்கிய போது, சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சுந்தராஜன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாற்றாக நாங்கள்…
வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவர் லோகநாதன். இங்கே போட்டியிடும் அவருக்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரச்சாரம் செய்ய வர உள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்றாக நாங்கள் வருவோம்.
ஊழல் எதிர்ப்பு
மாற்று அரசியலை நாங்கள் கொண்டு வருவோம். தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கையில் ஊழலை எதிர்த்தும், தமிழகத்தில் பொது விநியோக முறையில் சிர்குலைவை கண்டித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது எதிர்த்தும் நாங்கள் போராடுவோம்.
மநகூ ஆதரவு
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தடுத்திட வேண்டும். சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து உருவான மக்கள் நல கூட்டு இயக்கம் தொடர்ந்து செயல்படும். அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
தலைவர்களுக்கு மரியாதை
முன்னதாக, டாக்டர் அம்பேத்கர், சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த லோகநாதன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏராளமான சிபிஎம் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.