வைகோ கூட்டணியை உடைத்து சிபிஎம்மை வளைக்க திமுக முயற்சி: யெச்சூரியுடன் பேச்சு
சென்னை: வைகோவின் மக்கள் நலக் கூட்டணியை உடைத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை வளைப்பதற்கான வியூகங்களில் களம் இறங்கியுள்ளது தி.மு.க. இதன் முதல் கட்டமாக டெல்லியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் தி.மு.க. மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை தி.மு.கவுக்கு இருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரமாட்டோம் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்னதான் பிரகடனம் செய்தாலும் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு எத்தகைய விட்டுக் கொடுப்புகளையும் தி.மு.க. செய்யவே முன்வரும் என்பது யதார்த்தம்.
மக்கள் நலக் கூட்டணி
இதனிடையே தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக வைகோ மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணியால் அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகளை சிதறும் என்பதால் தி.மு.க. கடும் அதிருப்தியில் இருக்கிறது.
அதிமுக கிளைக் கழகம்
இதனால் இந்த கூட்டணியை உடைத்தாக வேண்டிய நெருக்கடியும் தி.மு.கவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் அதை அ.தி.மு.கவின் கிளைக் கழகமாக்கி வைத்திருக்கிறார் தா. பாண்டியன். தற்போதைய மாநில செயலாளர் முத்தரசனும் தா.பா வழியிலேயே செல்கிறார்.
வன்னியர் வாக்குகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் தங்களுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய கணிசமான வன்னியர் வாக்குகள் கிடைப்பதில்லை என்பது ஸ்டாலின் தரப்பின் கருத்து. இதனால்தான் விடுதலைச் சிறுத்தைகளை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முயற்சி ஏதும் இதுவரை எடுக்கவில்லை.
பிதாமகன் வைகோ
ம.தி.முகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலினை முதல்வராக்க நான் எப்படி உதவ முடியும் என்பதற்காக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய பிதாமகன். ஆகையால் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்த்த அந்த அணியில் எஞ்சியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியைத்தான் திமுக சேர்த்து கொள்ள முடியும்.
மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ்ட் கட்சியின் மேலிடத்துக்கும் தி.மு.கவுக்கும் நல்ல புரிந்துணர்வே இருக்க செய்கிறது. கருணாநிதியை மதசார்பின்மையின் தூண் என்று அழைத்தவர் அக் கட்சியின் பெரும் தலைவரான ஹர்கிஷன்சிங் சுர்ஜித். அதே போல யெச்சூரியும் திமுகவுடன் நல்லுறவை பேண விரும்பவுபவர் தான். அக்கட்சியின் பொதுச் செயலாளராக யெச்சூரி தேர்வு செய்யப்பட்ட போது கருணாநிதி வாழ்த்து தெரிவித்ததும் கருணாநிதிக்கு யெச்சூரி நன்றி தெரிவித்ததும் போக....
தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணி இருக்கலாம் என ஒருசில முறை கோடிட்டும் காட்டியிருந்தார் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவுதான் ஊழலை சுட்டிக் காட்டி அதிமுகவுடன் சேர்த்து தி.மு.கவையும் ஒதுக்கி வைக்க நினைக்கிறது.
ஆனால் தேசிய அரசியலில் ஊழலுக்கு அப்பால் பா.ஜ.கவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுதிரள வேண்டிய தேவையை பீகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
டி.ஆர்.பாலு- யெச்சூரி சந்திப்பு
இந்த சந்தர்ப்பத்தை பழம் பெரும் தலைவரான கருணாநிதி விட்டுவிடுவாரா என்ன? கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. அவர் மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் யெச்சூரியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இப்பேச்சுவார்த்தையில் யெச்சூரி, மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இருந்தபோதும் தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு மாற்றாக ஒரு அணியை இடதுசாரிகள் உருவாக்கும் போது தி.மு.கவின் பங்களிப்பு தேவைப்படும் அல்லவா? என்றெல்லாம் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார்.
ஊழலா? மதவாதமா?
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியில் தி.மு.க. கூட்டணியில் சேரலாமா? வேண்டாமா? என கருத்து பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இன்னமும் எத்தனை காலத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி பேசுவது... மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்பதுதான் இப்போதைய பிரச்சனை.. ஆகையால் நட்பு சக்திகளை ஒன்று சேர்க்கத்தான் வேண்டுமே தவிர மாநில தேர்தல்களை முன்வைத்து அவர்களை கை கழுவினால் பீகாரில் நமக்கு கிடைத்த மரண அடிதான் கிடைக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறதாம்...
பீகார் படிப்பினை
லாலு ஊழல்வாதி எனக் கூறி பீகாரில் இருக்கிற அத்தனை இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டனர். ஆனால் மாஜி நக்சலைட் அமைப்பான சி.பி.ஐ. (எம்-எல்) (லிபரேசன்) மட்டும் 3 தொகுதிகளில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் படுதோல்வியைத் தழுவின என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக வைகோவின் மக்கள் நலக் கூட்டணியில் மீண்டும் விரிசல் விழுவதற்கான அடித்தளம் டெல்லியில் போடப்பட்டுவிட்டது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.