எக்காரணம் கொண்டும் விடுவிக்கக்கூடாது.. ஆணவக்கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி நிபந்தனை!
மன்னார்குடி ஆணவக்கொலை வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
திருவாரூர்: மன்னார்குடி ஆணவக்கொலை வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடித்த கீழமருதூரை சேர்ந்த பழனியப்பன் - அமிர்தவள்ளி தம்பதி காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டதால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் பிறந்த ஒரு மாத குழந்தையும் கொலை செய்யப்பட்டது. இந்த வழக்கில் பழனியப்பனின் சகோதரர்கள் சிவசுப்பிரமணியம், ராமகிருஷ்ணன், துரைராஜ் மற்றும் மகேந்திரன் ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார்.
சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் ஆகிய இருவருக்கும் தலா 30 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கக்கூடாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் நிபந்தனை விதித்துள்ளார்.