ஏற்காடு இடைத்தேர்தல்: நாளை வாக்குப் பதிவு- மூன்றடுக்கு பாதுகாப்பு
ஏற்காடு: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.பெருமாள் கடந்த ஜூலை மாதம் மறைந்ததை அடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுகவைத் தவிர மாநில, தேசிய அரசியல் கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. போட்டியிடாத கட்சிகளில் பல தங்களது ஆதரவு யாருக்கு என்பதைக் கூட இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை.
திமுக- அதிமுக நேரடி போட்டி
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திமுக சார்பில் வெ.மாறனும், அதிமுக சார்பில் பெ.சரோஜாவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்காடு தொகுதி முழுவதிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது.
60 பேர் கொண்ட அதிமுக குழு
அதிமுக சார்பில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 60 பேர்களைக் கொண்ட மிகப் பெரிய தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டது.
திமுகவும் விறுவிறு பிரசாரம்
இதேபோல, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
ஜெ. பிரசாரம்
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு நாள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும், அதிமுக ஆதரவு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், சமக சார்பில் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு.தமிழரசன் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
ஸ்டாலின் பிரசாரம்
இதேபோல திமுக வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந் தேதி முதல் நான்கு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டார். சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேன் மூலம் சென்ற அவர் வேட்பாளர் மாறனுக்கு வாக்கு சேகரித்தார். இதேபோல், திமுக எம்.பி. கனிமொழி, அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கே.கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வெளியூர்காரர்கள் வெளியேற்றம்
வாக்குப் பதிவு நாளை நடைபெறுவதை அடுத்து, பிரசாரம் நிறைவடைந்ததும், அமைச்சர்கள், வெளியூர்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் தொகுதியைவிட்டு வெளியேறினர்.
மலைப் பகுதிகளிலும், கிராமங்களிலும் வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தங்கியுள்ளனரா என்று காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஏற்காடு தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் தொகுதியைவிட்டு ஒரே நேரத்தில் வெளியேறியதால் ஏற்காடு சாலை, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சாலைகளில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளை வாக்குப் பதிவு
தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
ஏற்காடு தொகுதியிலுள்ள 290 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கணக்கில் கொள்ளப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்பட 2500 போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.