மதுரையை தொடர்ந்து திருச்சி திமுகவிலும் 'கட்-அவுட்' களேபரம்
திருச்சி: மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் வைத்த கட்-அவுட்டால் பட்டபாடு அடங்குவதற்குள் இப்போது திருச்சியிலும் திமுக உள்கட்சி பூசல் கட்-அவுட் வடிவில் வெடித்துள்ளது.
பிறந்தநாள் கட்-அவுட் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செல்வராஜ் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய தலைமையிலுள்ளவர்கள் நேரடியாக களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.
கட்-அவுட்டால் கெட்-அவுட்
மதுரையில் அழகிரியின் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்த தொண்டர்கள் அதில் தலைமையை விமர்சனம் செய்த வாக்கியங்களை பொறித்ததாக கூறி பிரச்சனை வெடித்தது. ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவே, அதை எதிர்த்த அழகிரி திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். ஸ்டாலின் இறந்துவிடுவார் என்று அழகிரி மிரட்டியதாக கருணாநிதி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திமுகவுக்கு எதிராக அழகிரி
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, தேர்தலில் ஆதரவு கேட்டார். மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அழகிரி மீது அநியாயமாக திமுக நடவடிக்கை எடுத்துவிட்டது என்றார். அழகிரியும் கூட திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று பகிரங்கமாக ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.
திருச்சியிலும் ஆரம்பிச்சிட்டாங்க..
மதுரை பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது திருச்சியிலும் கட்-அவுட் தகராறு விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேருவுக்கும், என்.செல்வராஜுக்கும் நடுவேதான் இங்கு கலாட்டா.
பிறந்தாளை புடிச்சிக்கிறாங்க..
திருச்சியிலும் செல்வராஜ் பிறந்தநாளை காரணம் காட்டிதான் கட்-அவுட் தகராறு ஆரம்பித்துள்ளது. செல்வராஜை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் வைத்த கட்-அவுட்டுகள், அடித்த போஸ்டர்கள் மறைமுகமாக நேருவை தாக்குவதாக அமைந்துள்ளதாம். பிறந்தநாள் என்று ஒன்று வந்துவிட்டாலே அதை காரணம் காட்டி கட்-அவுட்டில் எதிர்தரப்பை வறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
புறஞ்சொல்லாத புறநானூற்று வீரம்
செல்வராஜை வாழ்த்தி வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்டுகளின் வாசகங்களை படித்து பார்த்தால் தமிழனின் சிந்தனை திறனுக்கு ஒரு அளவேயில்லை என்று சொல்லத்தோன்றும். 'பிறரை கெடுக்காத பெருமதியாளனே', 'குற்றமே இல்லாத கோமேதகமே', 'புறஞ்சொல்லாத புறநானூற்று வீரம்', 'ஊர்ப்பணத்தில் உல்லாசம் புரியாதவன்', 'பதவிகள் மூலம் தன்னை வளப்படுத்திக்கொள்ளாதவனே' என்ற வாசகங்கள் கட்-அவுட்டுகளில் உள்ளன.
சும்மா இருப்பார்களா நேரு குரூப்
இந்த கட்-அவுட்டுகளை பார்த்த நேரு ஆதரவாளர்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். அடுத்தவரை திட்டித்தான் செல்வராஜ் பிறந்தநாள் கொண்டாட வேண்டுமா என்று அவர்கள் பொறும ஆரம்பித்துள்ளனர். கட்சி தலைவருக்கும், பொருளாளருக்கும் எதிராக வைகோவுடன் போனவர் செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை மேலிடத்துக்கு நினைவூட்ட ஆரம்பித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டை பிரமாண்டமாக தலைவரே வியக்கும்படி நடத்திக்காட்டியது நேரு என்றும் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர்.
தலைமை என்ட்ரி..?
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டுள்ளதால், மதுரையைப்போல திருச்சியிலும் உட்கட்சி பூசல் உச்சத்துக்கு செல்லக்கூடும் என்று திமுக தலைமைக்கு தகவல்கள் வந்து குவிந்துகொண்டுள்ளன. உடனடியாக நிலைமையை சரி செய்ய கோதாவில் திமுக தலைமை குதித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்ல, இந்த பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தினால்தான் கட்சி உருப்படும் என்று யோசிக்க தொடங்கியுள்ளது திமுக தலைமை.