வர்தா புயல்: புதுச்சேரியில் கடற்கரை விடுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு
வர்தா புயல் அதிதீவிரமாக தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது
புதுச்சேரி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வர்தா புயலின் தாக்கத்தால் புதுச்சேரி கடலில் அலையின் வேகம் அதிகமாகவும், உயரமாகவும் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடலோரத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வானிலை மைய அறிவுறுத்தலை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் அபாய எச்சரிக்கையாக 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் காற்று100கி.மீ வேகத்துடன் வீசும் என்றும் மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி,காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை விடுதிகளில், ரெசார்ட்ஸ்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.